tamilnadu

img

காஷ்மீர்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு


வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனு குறித்து மத்திய அரசு செப்டம்பர் 2ம் தேதிக்குள் பதில் அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைஸல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர்  அரசியலில் ஈடுபட்டார் ஷா பைஸல். இதைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி தில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட இருந்த ஷா பைஸலை தில்லி போலீஸார் கைது செய்து மீண்டும் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸாரிடம் பைஸல் காரணம் கேட்டபோது, " மத்திய அரசு லுக்அவுட் நோட்டீஸ் தங்களுக்கு பிறப்பித்துள்ளதால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றும், பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர். அதன்பின் ஷா பைஸல் ஸ்ரீநகரில் உள்ள அவரின் வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் ஷா பைஸல் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அவர் கூறுகையில் " நான் என்னுடைய மேல்படிப்புக்காக அமெரிக்கா ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு செல்ல இருந்தேன். அதனால் தில்லி விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல் விமானத்துக்காக காத்திருந்தபோது எனக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பதாக தடுத்து நிறுத்தினர். ஆனால், எந்த லுக் அவுட் நோட்டீஸையும் எனக்கு எதிராக மத்திய அரசு பிறப்பிக்க வில்லை.
எந்த அடிப்படையில் என்னை வெளிநாடு செல்லவிடாமல் போலீஸார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள் என அறியவேண்டும். என்னை கைது செய்ததையும், வீட்டுக் காவலில் வைத்ததையும் நியாயப்படுத்த முடியாது, இது மத்திய அரசின் நல்ல எண்ணமற்ற செயலாகும். நான் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நகலை அளிக்க வேண்டும்" எனக் கேட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஷா பைஸலை நேரில் ஆஜர்படுத்தக் கோரி தில்லியைச் சேர்ந்த அவரின் உறவினர் ஒருவரும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்ரா ஷேகல் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், " ஷா பைஸல் மக்களை தூண்டிவிடுவார் என்ற அடிப்படையில்தான் பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தோம். அதுமட்டுமல்லாமல் அவர் ஹாவார்டு பல்கலைக்கழம் சென்று படிப்பதற்கான எந்த சான்றும் நாங்கள் கைது செய்தபோது இல்லை. அவரின் தில்லியில் இருந்து துருக்கி நாட்டுக்கும், துருக்கியில் இருந்து ஜெர்மனிக்கும், அங்கிருந்து பாஸ்டன் நகருக்கும் செல்ல டிக்கெட் மட்டுமே இருந்தது" எனத் தெரிவித்தார்.
ஷா பைஸல் சார்பில் வழக்கறிஞர் வரிசா சரசத் ஆஜராகினார். அப்போது அவர் வாதிடுகையில், " ஷா பைஸலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தால், அவர் வெளிநாடு செல்லாமல் தடுக்கத்தான் உரிமை உண்டு. ஆனால், எந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட விதத்தை எந்தஅடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் தீங்கான நடவடிக்கை. வெளிநாடு செல்பவரை தடுத்து நிறுத்தத்தான் லுக் அவுட் நோட்டீஸ், கைது செய்வதற்கு அல்ல. ஷா பைஸல் தனது மனைவி, பிள்ளைகளுடன் டெல்லியில் தங்க விரும்பியபோது, அவரை ஸ்ரீநகருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினார்கள்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 14-ம் தேதி ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இறங்கியுடன் மக்களை தூண்டிவிடும்படி பைஸல் பேச முயன்றார் என்று பொதுப்பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்துள்ளார்கள்.
ஆனால், கடந்த 14-ம் தேதி ஸ்ரீநகர் விமானநிலையத்தில் யார் இருந்தது. அந்த நாளில் விமானநிலையத்தில் யாருமே இல்லை. ஏனென்றால் மறுநாள் சுதந்திரதினம் என்பதால், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் விமானம் வருகை, புறப்படும் இடமும் நீண்ட தொலைவில் இருந்தது. யாரை தூண்டிவிட பைஸல் முயன்றார், அப்போது, சிஆர்பிஎப் பாதுகாவலர்கள் மட்டுமே இருந்தார்கள். 370 பிரிவை நீக்கியதை எதிர்த்து பைஸல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது குற்றமா, அவர் மீது என்ன வழக்கு இருக்கிறது " என்று வாதிட்டார். 
இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் விகாஸ் மகாஜன், பைஸல் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்ரா ஷேகல் பிறப்பித்த உத்தரவில், " வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் ஷா பைஸலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் குறித்த நகலை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதன்பின் 3-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பைஸல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.